Thursday, May 27, 2010

ருத்ராக்ஷம் - நன்றி - ஸ்வாமி ஓம்கார்

சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்கு, ஜடாமுடி, மண்டை ஓடு, ருத்ராஷம்,மிருக தோல் அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள்.

இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. சில பொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும்.

செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையன பொருட்கள் உதவுகிறது. இயற்கை பொருட்கள் மூலம் மனிதன் தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும் பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள் ஆகும்.

ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.

நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம் கிடைப்பதில்லை.

ருத்ராஷத்தின் வடிவம், அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று.

சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்து, ஆன்மீக ஆற்றல் கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும்.

ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்த, வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும்.

சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.

ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.

ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும். விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.

ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.

தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது.

குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்ரு முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.

மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர வேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. வேரு விசேஷம் அதில் இல்லை.

ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. கெமிக்கல் பொருட்கள், சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.

பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும். பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.


ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும், உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.

ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது, செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.நவரத்தின கல் போல இதனையும் வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம்.

ருத்ரக்ஷத்தை தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும். ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும், சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம்.

1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம் சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம்.

3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம், சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு.

4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும்.

5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.

தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம்.

ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.

ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு. இதை" பத்ராட்சம் " என அழைப்பார்கள். இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.

ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால் முடியும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்.

ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர ருத்ராக்ஷம் அணியுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல் முழுவதும் ருத்ராக்ஷம் அணியும் எந்த சிவனடியாரும் கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லை. பிறருக்கு கோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்தை விற்கும் வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவதில்லை என சிந்தித்துப் பார்த்தால் நிதர்சனம் புரியும்.

ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லஷியத்தை அடையமுடியும். பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள்.

இறந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சிலர் அணிய கூடாது என சொல்லுவார்கள். ருத்திராட்சத்தை காக்கும் கடவுளாக பார்க்க வேண்டும். எங்கெல்லாம் உங்கள் உடல்,மனம் மற்றும் ஆன்மா தவறான சக்திக்கு ஆட்படுமோ அங்கெல்லாம் அணியலாம்.

எப்பொழுதும் ஜபம் செய்த மாலையை கழுத்தில் அணிவது நல்லது. ஜபிக்கபட்ட மந்திரங்கள் அதில் நிறைந்திருக்கும். உங்கள் அலைபேசியில் சார்ஜ் செய்து விட்டு, வீட்டில் வைத்திருந்தால் என்ன பலன்?

ஜபம் செய்ததும் மாலையை அணிந்தால் அன்று வித்தியாசமான உள்ளுணர்வு இருப்பதை உணரலாம். முயற்சித்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

ஆன்மீக குரு, ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்ய துவங்கலாம். ஜபம் செய்யும் மந்திரம், மாலை அனைத்தும் அவர்க்ளின் கருத்தாக இருக்கவேண்டும். நாம் முடிவு செய்ய கூடாது.

இரு முக ருத்திராட்சம் தம்பதிகளுக்கு நல்லது. அதைகாட்டிலும் கெளரிஷங்கர் எனும் வகை உண்டு. அது சிறப்பு வய்ந்தது.

இரவில் அணிய கூடாது என சொல்லுவதற்கு காரணம். தாம்பத்திய காலத்தில் ருத்திராக்‌ஷம் அசுத்தமாக கூடாது என்பதற்காக தான்.

உடலுறவு காலத்தில் உடலின் ப்ராண சக்தி அதிகமாக குறைவு ஏற்படுவதால், அத்தருணத்தில் ருத்திராக்‌ஷம் செயல் இழக்க வாய்ப்பு உண்டு.

ருத்திரஷத்தை வேறு எந்த பொருளுடனும் இணைக்காமல் தனியே அணிவதே சிறந்தது.
ஸ்படிகம், முத்து, பவளம் என எதையும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

2 comments: